கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2002ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்த 200மாணவர்கள் 22 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடியதோடு, அப்போது அவர்கள் படித்த போது அவர்களுக்கு பாடம் நடத்திய 10ஆசிரியர்களை வரவழைத்து அவர்களை கெளரவித்த சம்பவம் மாணவர்கள் மட்டும் அல்லாது முன்னாள் ஆசிரியர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கும்மிடிப்பூண்டி கேஎல்கே அரசு மேல்நிலைப்பள்ளியின் 2002ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் நடத்திய இந்த நட்பின் சந்திப்பு நிகழ்வில் அவர்கள் படித்த போது அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களான எல்.எழிலரசி, கே.ஜெயச்சந்திரன், கே.ஜி.சடகோபன், பி.அண்ணாமலை, கே.ஜி.சிவலிங்கம், ஏ.எல்.வாசுதேவன், வி.முருகராஜ், கே.சந்திரசேகர், இ.பன்னீர்செல்வம், என்.எஸ்.வாசு, எஸ்.சரோஜினி பங்கேற்றனர்.
இந்த விழாவிற்கு கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் மினி, உதவி தலைமை ஆசிரியர் வள்ளிமுத்து, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு சால்வை மற்றும் நினைவு பரிசளித்ததோடு, முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின் ஆசிரியர்கள் பேசும் போது, அவர்களிடம் படித்த மாணவர்கள் தற்போது மருத்துவர். பேராசிரியர். அணி அதிகாரி, மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகிப்பதோடு, தலைமை ஆசிரியராகவும், ஆசிரியராகவும் சில மாணவர்கள் தற்போது உள்ளது பெரு மகிழ்ச்சி அளிக்கின்றது என நெகிழ்ச்சியோடு கூறினார்.
இதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சார்பில் மின்விசிறி, மேசை அமைத்ததோடு. சீரமைக்கப்பட்ட இரு வகுப்பறை கட்டிடத்தை ஆசிரியர்கள் திறந்து வைத்தனர். மேலும் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் சிறப்பிடம் பிடித்த 10.11,12ஆம் வகுப்பு மாணவர்கள் 10பேருக்கு ஊக்கத்தொகை மற்றும் நினைவு கேடயம் விழாவில் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடத்தப்பட்டதோடு. நிகழ்வில் பங்கேற்ற 200மாணவர்களும் நட்பின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக அவர்களது குடும்பத்தாரோடு பலூன்களை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். இந்த விழாவின் போது முன்னாள் மாணவரும் தற்போது சவிதா பல் மருத்துவ கல்லூரி மருந்தியல் துறை பேராசிரியராக உள்ள எழிலரசன் தேவராஜ் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் வகுப்பில் முதலிடம் படிக்கும் அறிவியல் பிரிவு மாணவருக்கு 10ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை. பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனை தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்களோடு பாட பிரிவு வாரியாக குழு படமும், தொடர்ந்து அனைத்து மாணவர்களும் குழு படமும் எடுத்து தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தினர். பின் அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடைபெற்றதும், மாணவர்கள் அனைவரும் ஆடல், பாடல் என தங்கள் நட்பை வெளிப்படுத்தினர்.


0 Comments