முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் போலீசார் விடிய விடிய விசாரணை
விருதுநகர்,
அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து. ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த 17-ந் தேதி முதல் தலைமறைவானார். 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடகவில் நேற்று கைது செய்தனர். கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கைதான ராஜேந்திர பாலாஜி தமிழ்நாடு அழைத்து வரப்பட்டார்.
விருதுநகர் போலீசாரிடம் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதற்கிடையே, ராஜேந்திரா பாலாஜிக்கு அடைக்கலம் தந்ததாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி விருதுநகருக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு, அவரிடம் மோசடி வழக்கு தொடர்பாக நேற்று இரவு முதல் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துள்ளது. இந்த விசாரணைய தொடர்ந்து ராஜேந்திரபாலாஜி இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
No comments