• Breaking News

    சனிப்பெயர்ச்சி: 24 மணி நேரமும் திருநள்ளாறு கோயிலில் தரிசனம்..... சிறப்பு வசதிகளுக்கு ஏற்பாடு.....

     


    சனிப்பெயர்ச்சி விழா  டிசம்பர் மாதம் 20ம் தேதி நடைபெற உள்ளதால் அன்றைய தினம் திருநள்ளாறுக்கு வரும்  பக்தர்கள் வசதிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 



    காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன்  திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனி பெயர்ச்சி விழாவுக்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை பார்வையிட்டு கோயில் நிர்வாகத்திடம் இது குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.


    காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வரும் 20-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த சுமார் 1,500 போலீஸார் மற்றும் தன்னார்வலா்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் பணியமர்த்தப்படுகிறாா்கள். 



    திருநள்ளாறு உள்ளிட்ட 13 இடங்களில் வாகனம் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தத்திலிருந்து கோயிலுக்கு செல்ல இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. விழாவையொட்டி டிச. 20ம் தேதி காலை 6 முதல் 21-ம் தேதி காலை 6 மணி வரை கோயில் நடை சாத்தப்படாது.


    தரிசனத்துக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப் லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட்டில் பக்தரின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். க்யூ ஆா் கோடு வசதி உள்ளதால், அதனை ஸ்கேன் செய்யும்போது கியூ (வரிசை) எங்கிருந்து தொடங்குகிறது என்ற விவரம் தெரியவரும். 16ம் தேதி முதல் ஆன்லைன் பதிவு தொடங்கும். திருநள்ளாறு பகுதியில் 15 இடங்களில் டிக்கெட் வழங்க மையம் அமைக்கப்படுகிறது.




    முதலுதவிக்கு புதுச்சேரி, காரைக்கால் மருத்துவமனை அல்லாமல் மீனாட்சி மிஷன், விநாயகா மிஷன் மருத்துவமனை நிர்வாகத்தினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  தமிழகம், ஆந்திரம், கா்நாடகத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்புப் பேருந்துகள்  இயக்க அந்தந்த  நிா்வாகத்தினரை கேட்டுக்கொண்டுள்ளோம். சிறப்பு ரயில் இயக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளில் குறை எதுவும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்தார்.  கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன் உடனிருந்தார்.

    No comments