• Breaking News

    ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம்..... 4 ஆயிரம் போலீஸார் குவிப்பு.......

     


    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக திருச்சி வரும் பிரதமர் வருகைக்காக 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு, ஒவ்வொரு கோயில்களுக்கும் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்.


    அந்தவகையில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மை முதல் திருத்தலமாகப் போற்றப்படும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு இன்று வருகிறார். முன்னதாக நேற்று மாலை சென்னையில் தேசிய அளவிலான கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார்.


    அங்கிருந்து இருந்து ஹெலிகாப்டர் மூலம் 10.45 மணி அளவில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு அவர் செல்கிறார்.


    பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலம் காலை 11.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. அதன்பிறகு ரெங்கநாதரை தரிசிக்கும் பிரதமர், கோயிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு நடத்துகிறார்.


    பின்னர் அங்குள்ள மண்டபத்தில் தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தை பாடுகிறார்கள். அதை மோடி கேட்கிறார். அதனுடன் அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். பின்னர் பகல் 12.50 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பஞ்சக்கரை செல்கிறார்.


    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, பின்னர் தனி விமானம் மூலம் அவர் மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மோடி திருச்சி வருகையையொட்டி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் (எஸ்பிஜி) கடந்த 2 நாட்களுக்கு முன்பே திருச்சிக்கு வந்து, பிரதமரின் வருகையின்போது, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.


    அத்துடன் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி பிரதமர் ஸ்ரீரங்கம் வரும் பகுதியில் புதிதாக தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒத்திகையின்போது, சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கார்கள் நீண்டவரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன. பிரதமர் வருகையையொட்டி ஸ்ரீரங்கம் பகுதியில் பாதுகாப்பு கருதி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    No comments