ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியதால் பரபரப்பு
ஆந்திர மாநிலத்தில் தற்போது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி 5 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார். இந்நிலையில், வரும் ஏப்ரல் - மே மாதங்களில் மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலுடன் இணைந்து, 175 தொகுதிகளைக் கொண்ட ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும், 25 மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, அங்குள்ள கட்சிகள் தற்போதே தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத்தொடங்கியுள்ளன. அனைத்து கட்சிகளும் பல்வேறு பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். ஜெகன்மோகன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்புடன் களத்தில் உள்ளார். இந்நிலையில், அங்கு பிரதான எதிர்க்கட்சியான சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.
இதனிடையே, முதல்வர் ஜெகனின் சகோதரி ஒய்எஸ்ஆர் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்து, அம்மாநில தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சியும் தனது இருப்பை காட்டத் திட்டமிட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் பாஜக இதுவரை கூட்டணியை முடிவு செய்யாமல் இருக்கிறது.
இந்த சூழலில் அங்குள்ள அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளைத் தொடங்கி பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு என்ற பகுதியில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது அவர் சென்ற ஹெலிகாப்டர் வழி தவறி வேறு பாதையில் சென்றுள்ளது. இதனைக் கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், பைலட்டுக்கு எச்சரிக்கை செய்தனர்.
இந்த எச்சரிக்கையை அடுத்து ஹெலிகாப்டர் மீண்டும் விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதிக்கு சென்று பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமான போக்குவரத்து ஒருங்கிணைப்பு இல்லாததால் வழி தவறி வேறு திசையில் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சந்திரபாபு நாயுடு பயணித்த ஹெலிகாப்டர் வழி தவறி வேறு பாதையில் சென்றதால் தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் சிறிது நேரம் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
No comments