ஐபிஎல் கிரிக்கெட் பார்த்தபடியே பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் லைசென்ஸ் ரத்து.....


 கடலூரில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்தபடியே பேருந்தை இயக்கியதால் அவரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.கடந்த 24-ந் தேதி இரவு கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது அந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநர், தனது செல்போனில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்தபடி இருந்துள்ளார்.

கிரிக்கெட் மேட்சைப் பார்த்துக் கொண்டே பேருந்தை இயக்கியதால் சில இடங்களில் சாலையில் சென்ற வாகனங்களை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்ததாக அவர் மீது பயணிகள் குற்றம்சாட்டினர். மேலும் அவர், உரிய இடத்தில் பேருந்தை நிறுத்தாமல் சற்று தொலைவில் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த பயணிகள், கிரிக்கெட் போட்டியை காணுவதை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் அதை சட்டை செய்யாத ஓட்டுநர், தொடர்ந்து செல்போனை பார்த்தபடி பேருந்தை இயக்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படமும், வீடியோவும் இணையத்தில் வெளியான நிலையில், சிலர் இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளனர்.புகாரின் பேரில், சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநரை நேற்று நேரில் அழைத்து விசாரித்தனர். விசாரணையில், அந்த ஓட்டுநர் சக்கரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பதும் பேருந்தை இயக்கியபோது, செல்போனில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்ததும் உறுதியானது.

இதுகுறித்து ஓட்டுநர் சுரேஷ் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் மன்னிப்புக் கடிதம் வழங்கிய போதும் போக்குவரத்து அதிகாரிகள் அவரின் ஓட்டுநர் உரிமத்தை ஒரு மாத காலத்துக்கு தற்காலிகமாக ரத்து செய்தனர். இதன் மூலம் இதுபோன்ற தவறுகளை மற்ற ஓட்டுநர்கள் செய்யமாட்டார்கள் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அவரது உரிமத்தை நிரந்தரமாகவே ரத்து செய்திருக்க வேண்டும் என புகார் கொடுத்த பயணிகள் தரப்பிலிருந்து ஆதங்கப்பட்டிருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments