அவதூறு பேச்சுக்கு துணை நிற்கும் ஈபிஎஸ்....? சவுக்கு சங்கருக்கு ஆதரவாக அறிக்கை....
சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதற்காக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கொண்டு செல்லப்பட்ட வாகனம் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
"விடியா திமுக அரசின் ஊழல்களைத் தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம்.ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் ஸ்டாலின் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.
சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்' என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையின் மூலம் அவதூறு பேச்சுக்கு எடப்பாடி பழனிச்சாமி துணை போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
No comments