• Breaking News

    செந்தில் பாலாஜிக்கு ஜாமின்..... அரசியல்வாதிகளின் கருத்து.....

     


    மோசடி வழக்கில் 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று(செப்.,26) சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. இது குறித்து தலைவர்கள் கருத்து பின்வருமாறு:

    முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,' செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.

    கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    தி.மு.க., அமைப்பு பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும் இல்லை. அமலாக்கத்துறை வேண்டுமென்றே இழுத்தடித்தார்கள். பா.ஜ.,வினர் இனிமேல் திருந்த வேண்டும். அவர்கள் அரசியல் தலைவர்கள் மீது போட்ட வழக்குகளில் எல்லாம் சுப்ரீம் கோர்ட் ஜாமினில் விடுதலை செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    'ஜாமினில் வந்துள்ள செந்தில்பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். நீதிமன்றம் செந்தில்பாலாஜி வழக்கை கவனித்துக்கொண்டிருக்கிறது' என பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.


    '15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சர் பொறுப்பு உள்ளிட்டவை குறித்து தலைமை முடிவு செய்யும்' என்றார் அமைச்சர் முத்துசாமி

    '15 மாத கால சமரசமற்ற கடும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. துயரம், தனிமையை அசைக்கமுடியாத மன உறுதியோடு எதிர்கொண்டு வென்ற செந்தில் பாலாஜிக்கு வாழ்த்துக்கள்' என காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி கூறினார்.

    'செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு சட்டப் போராட்டங்களை செந்தில் பாலாஜி சந்தித்த பின் அவருக்கு ஜாமின் கிடைத்துள்ளது' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

    அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம்கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கி இருப்பது மகிழ்ச்சியான செய்தி ஆகும். கடந்த 15 மாதங்களாக அவர் சட்ட போராட்டம் நடத்தி வந்துள்ளார். அவரை போல பொறுமையாக சட்டப்போராட்டம் நடத்திய ஒருவரை பார்க்க முடியாது.

    சிறையில் இருந்து கொண்டு அமைச்சர் பதவி கூட எனக்கு வேண்டாம் என சொல்லி மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு ஜாமின் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. வழக்குகளில் அவர் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

    No comments