16 மாநிலங்களில் குறி வைத்து ரூ.10 ஆயிரம் கோடி மோசடி..... பொறி வைத்து இருவரை பிடித்த போலீசார்.....
ராஜஸ்தானை சேர்ந்த சுனில் குமார் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் ' டெலிகிராம்' செயலியில், தெரியாத எண்ணில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டார். அந்த எண்ணில் எனது நண்பர் படம் இருந்ததால், அவருடன் 'சாட்டிங்'கில் ஈடுபட்டேன்.
அப்போது, ஆடம்பர வாழ்க்கை வாழலாம். தினமும் 3 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றார். இதனை நம்பி பல தவணைகளில் அவரது சொன்ன வங்கிக்கணக்குகளுக்கு ரூ.94,70,300 அனுப்பினேன். ஆனால், அவர் ஏமாற்றி விட்டார் எனக்கூறி இருந்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சுனில்குமார் அனுப்பிய வங்கிக்கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தனர். அந்தக் கணக்குகள், ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுதிர் யாதவ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த பல் டாக்டர் ஆனந்த் சோனி என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவர்களிடம் இருந்து ரூ.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு சுனில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. எஞ்சிய பணம் எங்கு உள்ளது, அவர்களுடன் வேறு யார் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபடுவதற்காக போலியாக ஒரு நிறுவனத்தை இருவரும் துவக்கி உள்ளனர். சுதிர் யாதவ் பெயரில் வங்கிக்கணக்கு துவக்கி 16 மாநிலங்களில் 51 சைபர் குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
மஹாராஷ்டிரா(9), தெலுங்கானா(7), ஆந்திரா(6), கர்நாடகா(5), தமிழகம்(4), ராஜஸ்தான், கேரளாவில் தலா 3, உ.பி., காஷ்மீர், டில்லி, குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தலா 2, ஹரியானா, பஞ்சாப், ஒடிசா மற்றும் சத்தீஸ்கரில் தலா ஒரு சைபர் குற்றங்களில் இவர்கள் ஈடுபட்டு உள்ளனர். அந்த வகையில் இக்கும்பல் ரூ.10,01,80,865 அளவுக்கு மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
No comments