• Breaking News

    ஜெயலலிதா பிறந்தநாள் விழா.... இபிஎஸ் உடன் செல்வதை புறக்கணித்த செங்கோட்டையன்

     


    இந்திய அளவில் தவிர்க்க முடியாத பெண் தலைவர்களில் ஒருவர் ஜெயலலிதா. தமிழக அரசியலில் தனக்கென தனி முத்திரை பதித்து பெண் ஆளுமையாக வலம் வந்தவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அந்த கட்சியை சிறப்பாக வழி நடத்தியதோடு 6 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று 77வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு அதிமுகவினர் ஜெயலலிதா அம்மையாருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார்கள்.

    அந்த வகையில் அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா அம்மையாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் செங்கோட்டையன் மட்டும் கலந்து கொள்ளவில்லை. அவர் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    மேலும் ஏற்கனவே செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்தார். சமீபத்தில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை அவர் சொல்லவில்லை. இந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவையும் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளது அதிமுக கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments