• Breaking News

    குன்றம் காக்க.... கோவிலை காக்க.... மதுரையில் இன்று பிரமாண்ட முருக பக்தர்கள் மாநாடு

     


    மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள, 8 லட்சம் சதுரடி பரப்பு மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாடு முக்கிய நிகழ்வாக மாநாடு அரங்கிலும், வெளியிலுமாக 5 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    நேரில் கலந்து கொள்ளாதவர்கள் அவரவர் வீடுகளில் இருந்து பாடலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்களை மதியம், 3:00 மணிக்குள் மாநாட்டு திடலுக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். மாலை, 4:00 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடக்கிறது.

    மாலை, 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும். இதற்காக மாநாட்டு வளாகம் முழுதும் 18 எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    திரையை பார்த்து பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாநாட்டுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், பாஸ் பெற வேண்டும் என போலீசார் அறிவித்திருந்தனர். இதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், வெளியூர்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கேற்ப வாகனங்களை பார்க்கிங் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வண்டியூர் டோல்கேட் அருகே பிரதான சாலையில் மாநாடு வளாகம் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநாட்டிற்கு வரும் முக்கிய விருந்தினர்களுக்கு சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.மாநாடு வளாகத்திற்கு பொதுமக்கள் செல்ல இரு நுழைவாயில்களும், வி.ஐ.பி., வாகனங்கள் செல்ல ஒரு நுழைவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டு வளாகத்திற்கு எதிர்புறம் வாகனங்கள் நிறுத்த மிகப்பெரிய பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் செல்லும் வழியில் பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவர்.

    வாகனங்களை ஒருங்கிணைக்கவும், பக்தர்களை வழிநடத்தவும் அந்த பகுதியில் மட்டும் 300 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு கூட்டத்திற்கு ஏற்ப பக்தர்கள் பிரித்து விடப்படுவர். மாற்றுத்திறனாளிகள் செல்ல சக்கர நாற்காலிகளும், பாலுாட்ட தனி அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மாநாட்டு திடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில், 1,000 லிட்டர் தண்ணீர் டேங்குகள், 200 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மாநாட்டையொட்டி போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் ஐந்து துணை கமிஷனர்கள், 15 உதவி கமிஷனர்கள், 54 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 2,279 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மாநாட்டில் பங்கேற்க சிறப்பு விமானத்தில் இன்று காலை, 11:00 மணிக்கு மதுரை வருகிறார்.

    மாநாட்டை முன்னிட்டு, அறுபடை வீடுகளின் அருட்காட்சி ஜூன் 16ல் திறக்கப்பட்டது. நேற்று மாலை வரை ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    No comments