![]() |
| File Image |
தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது.திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.தற்போதைய நிலையில் 4 முனைப் போட்டி நிலவுகிறது.
அதாவது, தி.மு.க. தலைமையில் ஒரு அணி, அதிமுக பாஜக அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. மேலும் அ.தி.மு.க. தனது கூட்டணிக்குள் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை கொண்டு வர விருப்பப்படுகிறது. அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதேவேளையில், இப்போது கூட்டணியில் உள்ள பா.ஜனதாவுக்கு எத்தனை சீட்டுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் அந்த கட்சியினர் இடையே ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி இன்று காலை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி - அன்புமணி சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார், வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோர் உடன் இருந்தனர். பாமக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணி குறித்து அன்புமணி பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த முறை அதிமுக கூட்டணியில் 23-ல் போட்டியிட்டு 5 தொகுதிகளில் பா.ம.க. வென்றிருந்தது. 2021-ல் வடக்கு, வடமேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க. வெற்றிக்கு கணிசமாக உதவி இருந்தது பா.ம.க.
இந்நிலையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விடம் 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை அன்புமணி தரப்பு கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித்ஷா தமிழகம் வந்துள்ள நிலையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments