காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தலைவருமான சோனியா காந்தி (79), உடல்நலக் குறைவு காரணமாகத் தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகத் தீவிர இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனையால் சோனியா காந்தி அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தில்லியில் தற்போது நிலவி வரும் கடும் காற்று மாசு காரணமாக, அவருக்கு நுரையீரல் தொடர்பான உபாதைகள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இதனையடுத்தே, அவர் மேல் சிகிச்சைக்காகவும், மருத்துவப் பரிசோதனைகளுக்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து சர் கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சோனியா காந்தி அவர்கள் பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நுரையீரல் துறை நிபுணர்களின் நேரடி கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது; கவலைப்படும்படி ஏதுமில்லை.”மேலும் தற்போது 79 வயதாகும் சோனியா காந்தி, கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்.
அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தில்லி காற்று மாசுப் பிரச்சனை காரணமாகப் பல அரசியல் தலைவர்களும் உடல்நலப் பாதிப்பிற்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments