ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அய்யன் கோவில்பட்டி கிராம பொதுமக்கள் மயானச் சாலை வசதி வேண்டி பிரேதத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கமுதி அருகே அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அய்யன்கோயில்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மயான சாலை வசதி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று இக்கிராமத்தில் மூதாட்டி ஒருவர் இறந்துள்ளார்.
மூதாட்டியை அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்ற உறவினர்கள் மற்றும் கிராம பொது மக்கள் அனைவரும் மூதாட்டியின் பிரேதத்தை கமுதி -அருப்புக்கோட்டை சாலையின் நடுவே வைத்து மயானச் சாலை வசதி செய்து தர வேண்டி கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக வந்த கமுதி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முகம்மது இர்ஷாத் தலைமையிலான போலீசார் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் வேலவன், கமுதி கிராம நிர்வாக அலுவலர்கள் தாரணிஅரசி, பூபதி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வேல்மயில் ஆகியோர் கிராம மக்களிடம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தி, பின்னர் விரைவில் மயான சாலை வசதி செய்து தரப்படும் என்று உறுதியளித்தன் பேரில், கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர் பின்னர் பிரேதத்தை எடுத்து சென்றனர் இதனால் கமுதி -அருப்புக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



0 Comments