பழவேற்காடு அருகே அவுரிவாக்கம் மீனவ கிராமத்தில் பொங்கல் விழா..... நடிகைகள் கௌதமி,மதுவந்தி பங்கேற்பு.....


திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அவுரிவாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் நடிகைகள் கௌதமி, மதுவந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பெண்களுடன் விறகு அடுப்பில் சர்க்கரை பொங்கலிட்டு மீனவ பெண்களுடன் கொண்டாடினர். முன்னதாக பொங்கல் விழாவிற்கு வருகை தந்த நடிகை கௌதமிக்கு வரவேற்பு அளித்த போது தேவர் மகன் திரைப்படத்தில் வரும் சாந்து பொட்டு, சந்தன பொட்டு பாடளுக்கு மீனவ பெண்களுடன் இணைந்து நடிகைகள் கௌதமி, மதுவந்தி இருவரும் நடனமாடினர். நிகழ்ச்சியில் நடிகை மதுவந்தி பேசுகையில் மகாபாரதத்தை எழுதிய வியாச பெருமானே மீனவர் என நினைவு கூர்ந்தார். மீனவர்களை மதிக்கவில்லை என்றால் உருப்பட முடியாது எனவும், இன்னும் 3 மாதம் உருப்படாமல் சென்று ஏப்ரல்க்கு பிறகு தமிழ்நாட்டில் நல்லது நடக்கும் என்றார். 

சர்வதேச எல்லையில் மீனவர்கள் சுட்டுக்கொன்ற போது யாரும் குரல் கொடுக்கவில்லை எனவும், தற்போது மீனவர்களுக்காக குரல் கொடுத்து வருபவர் பிரதமர் மோடி என தெரிவித்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசி மீனவர்களை விடுவித்து மீட்டு கொண்டு வந்தார் எனவும், இங்குள்ளவர்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள் என்றார். அதிமுக, பாஜக என்பது இயற்கையான கூட்டணி எனவும், எத்தனை விர்ச்சுவல் வாரியர்ஸ் வந்தாலும் இந்த கூட்டணியை எதுவும் செய்ய முடியாது, கலைக்க முடியாது என்றார். மீனவர்கள் நினைத்தால் நல்லாட்சியை கொண்டு வர முடியும் என்றார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் போது அனைத்து மீனவ கிராமங்களுக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்கும் எனவும், தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக கொடுக்கும் 3000 ரூபாயை வாங்கி கொண்டு வாக்கை மாற்றி செலுத்துங்கள் எனவும், திருப்பரங்குன்றம் முருகன் எப்படி டயரை வெடித்தானோ அது போல அனைத்தும் வெடித்து சிதறி நல்லாட்சி பழனிசாமி ஆட்சி தமிழ்நாட்டில் மலரும் என்றார். இறுதி உரை நிகழ்த்திய கௌதமி, மீனவ கிராமத்திற்கு வெளிச்சம் வர வேண்டும் எனவும், மீனவர்கள் கலாச்சாரம் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என்றார். அனைத்து விஞ்ஞான வளர்ச்சிகளும் கிராமங்களை சென்று அடைந்திட வேண்டும் என்றார்.

 ஆட்சி மாற்றம் நடந்தவுடன் அனைத்து வளர்ச்சியும் கிடைக்கும் என உறுதி அளித்தார். பல ஆண்டுகளாக தான் நடனமாடவில்லை எனவும், வாழ்க்கையின் ஓட்டத்தில் மறந்து கிடந்த தமது நடனத்தை மீண்டும் தம்மை ஆட வைத்ததற்கு நன்றி தெரிவித்த கௌதமி மீனவ மக்களை பார்த்து அன்பை பொழியும் வகையில் இதய வடிவை காட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கௌதமியிடன் 3மாதத்தில் எந்த அடிப்படையில் ஆட்சி மாற்றம் வரும் என மேடையில் பேசினீர்கள், நாட்டிலேயே 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளதே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, எந்த கணக்கின் அடிப்படையில் நாட்டில் 2வது மாநிலமாக உள்ளதாக கூறுகிறீர்கள் என செய்தியாளரிடம் பதில் கேள்வி எழுப்பினார். பல விவரங்கள் அதில் கேள்விக்குறியாக உள்ளதாகவும், தற்போது அதனை விவாதிக்க முடியாது என்றும், புள்ளியில் அடிப்படையில், தரவுகள், வளர்ச்சி என பல்வேறு அம்சங்களை கொண்டு பேச வேண்டும் என்றும், மக்களின் உண்மை நிலவரம் என்பது கண் திறந்து சாலையில் கால் வைத்து நடந்து மனம் விட்டு மக்களை கவனித்தால் மக்களின் உண்மை நிலவரம், அவர்களது துயரம், துன்பத்தில் வாழ்ந்து வருவது புரிய வரும் என்றார். பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என யாருக்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றார். வேலைக்கு பாதுகாப்பு இல்லை, வருமானத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றார். நடுத்தர வர்க்கம், ஏழைகள் என யார் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்பதை கூற முடியுமா என நடிகை கௌதமி வினவினார். மக்கள் துயரப்பட்டு ஈட்டும் வருமானம் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத அளவு விலைவாசி உயர்ந்துள்ளதாக சாடினார். தமிழ்நாட்டில் எந்த பகுதியில் வாழும் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்பதை கூற முடியுமா எனவும், அப்போது இந்த ஆட்சி வெற்றிகரமானது, வளர்ச்சிக்கான ஆட்சி, தமிழ்நாடு முன்னேற்றப்பாதையில் உள்ளது என்பதை பேசுவோம் என்றார். 

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளிவராததற்கு பிரதமர் மோடி காரணம் என கூறுவது குறித்த கேள்விக்கு, அது குறித்து தான் பேச விரும்பவில்லை என்றார். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் என்ன செய்தார்கள் என்பதை செல்வதற்கு ஏதும் இல்லாததால், தேடி தேடி அனைத்தையும் திசை திருப்ப பார்ப்பதாக சாடினார். இளைஞர்கள், பெண்கள் என படித்த அனைவருக்கும் வேலை கிடைத்து விட்டதா என வினவினார். சென்சார் அமைப்பு குறித்த கேள்விக்கு, தனக்கும் சென்சாருக்கும் சம்மந்தம் இல்லை என கூறி கௌதமி  புறப்பட்டு சென்றார்.  தொடர்ந்து நடிகை மதுவந்தியிடம் மோடி அரசு மீனவர்களை காப்பாற்றுவதாக கூறியது குறித்த கேள்விக்கு தான் சரியாக பேசுவதாகவும், உங்களுக்கு புள்ளிவிவரம் தெரியவில்லை என்றார். தான் பேசியதை நீங்கள் திரித்து சொல்ல முயன்றால் அதற்கு தான் பொறுப்பல்ல எனவும், மோடி ஆட்சியில் சர்வதேச எல்லையில் மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை பாதுகாத்து, மீட்டு கொண்டு வந்துள்ளதாகவும், காணாமல் போன மீனவர்கள், தாக்கப்படும் மீனவர்கள் என பலரை மோடி அரசு மீட்டு கொடுத்துள்ளதாக கூறினார். நிகழ்ச்சியில் மீனவ கிராம சிறுமிகள் மேடையில் உற்சாகமாக ஆடிய நடனத்தை நடிகைகள் கௌதமி, மதுவந்தி இருவரும் கைத்தட்டி ரசித்து கண்டு களித்து சால்வை அணிவித்து பாராட்டினர். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மீனவ கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.  பின்னர் அனைவரும் பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்தனர்.பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர் காளிராஜ்,சப்-இன்ஸ்பெக்டர் மனோவா செபாஸ்டியன் உள்ளிட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீனவ பேரவை தலைவர் அன்பழகனார் மற்றும் நிர்வாகிகள் மாங்கோடு மோகன்,ராஜா,சுமித்ரா குமார்,எர்ணாவூரான்,ஞானவேல்,ஞானமூர்த்தி மற்றும் அவுரிவாக்கம் கிராம நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments