பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த வாரம் ஆப்கான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டதாகவும், 12-க்கும் மேற்பட்ட ராணுவ முகாம்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கொல்லப்பட்ட 23 பேரின் உடல்கள் தங்கள் வசம் இருப்பதாகவும் ஆப்கான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் அறிவித்துள்ளார்.இதனை மறுத்துள்ள பாகிஸ்தான், தங்கள் தரப்பில் 2 வீரர்கள் மட்டுமே பலியானதாகவும், பதிலடித் தாக்குதலில் 36 ஆப்கான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையே உள்ள 2,611 கி.மீ. நீளமுள்ள ‘டியூரண்ட் லைன்’ எல்லையை ஆப்கானிஸ்தான் இதுவரை அங்கீகரிக்கவில்லை. மேலும், பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு ஆப்கான் அடைக்கலம் தருவதாக பாகிஸ்தானும், ஆப்கான் இறையாண்மையில் பாகிஸ்தான் தலையிடுவதாக ஆப்கானிஸ்தானும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.இந்த நிலையில், இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “நான் தலையிடலாம். ஆனால், பாகிஸ்தானில் சிறந்த பிரதமரும் ராணுவ ஜெனரலும் உள்ளனர். அவர்கள் இருவரையும் நான் வெகுவாக மதிக்கிறேன். பாகிஸ்தான் சிறப்பான பணிகளை செய்து வருவதாகவே நான் கருதுகிறேன்,” என்று கூறியுள்ளார்.

0 Comments