• Breaking News

    மின் கட்டணம் ரூ.3,420 கோடி? முதியவர் மயக்கம்

     மத்திய பிரதேசத்தில் வீட்டின் மின் கட்டணம் 3,420 கோடி ரூபாய் என குறிப்பிட்டு, 'பில்' வந்ததால், அதிர்ச்சியில் மயங்கி விழுந்த முதியவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள குவாலியர் நகரில் வசிப்பவர் சஞ்சீவ்.இவரது வீட்டுக்கு சமீபத்தில் மின் வாரியத்தில் இருந்து பில் வந்தது. அதில், ஒரு மாதத்துக்கான மின் கட்டணம் 3,420 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அந்த பில்லை தன் தந்தையிடம் காட்டினார். அதைப் பார்த்ததும், முதியவர் அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தார்.

    இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்ற சஞ்சீவ், அதிக கட்டணம் குறித்து புகார் தெரிவித்தார். அப்போது தான், அதில் மனித தவறு நடந்தது தெரிய வந்தது. இது குறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:கம்ப்யூட்டர் வாயிலாக பில் தயாரிக்கப்படுகிறது. பணியிலிருந்த ஊழியர், நுகர்வோர் எண்ணை, பயன்படுத்திய மின்சார யூனிட் என கருதி, தவறாக பதிவிட்டு விட்டார். இதனால், மின் கட்டணம் 3,420 கோடி ரூபாய் என வந்து விட்டது.
    உண்மையில் சஞ்சீவ் வீட்டின் மின் கட்டணம் 1,300 ரூபாய் தான். நடந்த தவறுக்காக வருந்து கிறோம். சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    No comments