• Breaking News

    பிளஸ்-1 மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்…. தீயாய் பரவும் சிசிடிவி காட்சிகள்...

     ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகரில் இருக்கும் இலங்கை தமிழர் முகாமில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியமங்கலத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை நவீன்குமார் காதலித்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு அளித்ததால் மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் நவீன் குமாரை கைது செய்தனர். இதனையடுத்து ஜாமீனில் வெளியே வந்த நவீன் நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது வலியில் மாணவி அலறி துடித்ததால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே நவீன் குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதற்கிடையில் அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நவீன்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நவீன்குமார் மாணவியை பிடித்து இழுத்து கழுத்தில் கத்தியால் அறுத்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments