தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 19 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், கடந்த சில நாட்களாக, பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி எஸ்டேட் பகுதியில், 11 செ.மீ., மழை பதிவானது.இதே மாவட்டத்தில், விண்ட் ஒர்த் எஸ்டேட்; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பெரியநாயக் கன் பாளையம்; கன்னி யாகுமரி மாவட்டம் தக்கலை பகுதிகளில், தலா, 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து, 3.6 கி.மீ., உயரத்தில், இந்த சுழற்சி நிலவுகிறது.இதனால், தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரியில் இன்றும் நாளையும், இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் மிதமான மழை பெய்யும் இடங்களின் எண்ணிக்கை குறையக்கூடும்.நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், நாளை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் மேகமூட்டமாகக் காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments