தீபாவளி பண்டிகை: டாஸ்மாக் கடைகளில் ரூ.430 கோடிக்கு மது விற்பனை
தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளில், தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு, மதுபான வகைகள் விற்பனையாகின்றன. இது, வார விடுமுறை மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது.தீபாவளி பண்டிகை, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சொந்த ஊர் சென்ற பல, 'குடி'மகன்கள் நண்பர்களுடன், மது விருந்தில் ஈடுபட்டனர். இதற்காக முந்தைய நாளே, மது வகைகளை அதிகம் வாங்கினர்.
இதனால், 30ம் தேதியும், தீபாவளி தினத்தன்றும், 430 கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள் விற்பனையாகின. தீபாவளிக்கு மட்டும், 220 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த, 2023ல், தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் என, இரு நாட்கள் மது விற்பனை, 467 கோடி ரூபாயாக இருந்தது.இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தீபாவளி மற்றும் அதற்கு அடுத்த நாள் அரசு விடுமுறை என்பதால், டாஸ்மாக் அலுவலகங்கள் செயல்படவில்லை. இதனால், மது விற்பனை விபரம் குறித்த தகவல், முழுதுமாக கிடைக்கவில்லை.எனினும், மது வகை அனுப்பியது, ஊழியர்களிடம் கிடைத்த தகவல் அடிப்படையில், 430 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த தீபாவளிக்கு, நான்கு நாட்கள் அரசு விடுமுறை வந்ததால், பலரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மது வாங்குவதற்காக, தீபாவளிக்கு குறைவாக வாங்கி உள்ளனர். இதனால் தான், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மது விற்பனை சற்று குறைந்துள்ளது. மாதம், 50 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாகின்றன.அதில் சாதாரண மது வகை பங்கு, 65 சதவீதம், நடுத்தரம், 20 சதவீதம், பிரீமியம் வகை, 15 சதவீதம் இருக்கும்.
தீபாவளி தினத்தில், பிரீமியம் மது விற்பனை, 30 சதவீதமாகவும்; நடுத்தர வகை, 20 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments