குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
தென்காசியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வரை பெய்த தொடர் மழையின் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வார காலமாக சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க தடையானது விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக மழைப்பொழிவு குறைந்து வெயில் முகம் காட்டி வருவதால் அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.
இன்று வார விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து வருகின்றனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் வெண்ணமடை படகு குழாமில் படகு சவாரி போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் குற்றாலம் சாரல் திருவிழா நடத்தப்பட இருப்பதாகவும், கடந்த ஆண்டு 5 நாட்கள் நடத்தப்பட்ட விழாவானது இந்த ஆண்டு 7 நாட்களாக அதிகரிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
No comments