விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ஆவடையார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம் மகன் குமரன் (வயது 48). பா.ஜனதா எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு ஒன்றிய தலைவராக இருந்து வந்தார்.
இதேபோன்று கோலியனூர் தொடர்ந்தனூரை சேர்ந்தவர் ஜான்சன் (40). சாலாமேடு பகுதியில் வசித்து வரும் இவர் விக்கிரவாண்டி அருகே ஆவடையார்பட்டில் இருந்து தொரவி செல்லும் சாலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நிலத்தில் நாய் பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது பண்ணைக்கு அருகில் உள்ள நிலத்தை குமரன் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறார். அந்தநிலத்தில் விவசாய பணிக்காக ஏர் ஓட்டியபோது ஜான்சன் அதை தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது.
நேற்று மாலை 4 மணியளவில் குமரன் தனது நிலத்திற்கு சென்றார். அப்போது, அங்கிருந்த ஜான்சன், குமரன் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜான்சன் சமையல் செய்யும் ஜல்லி கரண்டியால் குமரன் தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த குமரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்த குமரனின் உறவினர்கள், கொலை செய்தவரை கைது செய்ய வேண்டும் அதன் பின்னர் தான் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்ல விடுவோம் என்று கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதன் பின்னர் இறந்தவரின் உடலை ஆம்புலன்ஸ் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமைறைவான ஜான்சனை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment