திண்டுக்கல்: கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறு..... கொலை செய்து நாடகமாடிய மனைவி......


 திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சொக்குபிள்ளை பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (35). இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த சூர்யா என்பவருக்கும், பழனியம்மாளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் தங்கள் ஊரில் வீட்டை காலி செய்து நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியில் புதிதாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மாரியப்பன் வீட்டில் மயங்கி விழுந்து விட்டதாக தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்துள்ளனர்.

அப்போது மாரியப்பனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாரியப்பனின் உடலை பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது கழுத்தில் காயங்கள் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சந்தேகத்தின்பேரில், பழனியம்மாளை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பழனியம்மாளும், சூர்யாவும் சேர்ந்து மாரியப்பனின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, பழனியம்மாள், சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments