புதுக்கோட்டை: தனியார் பேருந்தில் ரூ.4½ கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருள் சிக்கியது

 


புதுக்கோட்டையில் இருந்து தொண்டி சென்ற தனியார் பஸ்சில் உயர் ரக போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக தொண்டியை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சுங்கத்துறை இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் தொண்டி அதிகாரிகள், நேற்று மதியம் எஸ்.பி.பட்டினத்தை அடுத்த கலியநகரி கிராமத்தின் அருகே சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் இருந்து தொண்டி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்சை மறித்தும் சோதனை செய்தனர்.

அந்த பஸ்சில் பயணிகள் உடைமைகள் வைக்கும் இடத்தில் சந்தேகப்படும் வகையில் ஒரு பாலித்தீன் பை இருந்தது. அதனை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது, அதில் உயர்ரக ஐஸ் போதைப்பொருள் இருந்தது.உடனே பஸ்சை முழுமையாக அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த போதைப்பொருளை கடத்தி வந்தவர் யார்? என தெரியாததால் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஸ் ரக போதைப்பொருள் சுமார் 1½ கிலோ எடையில் கைப்பற்றப்பட்டு உள்ளது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.4½ கோடி என கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments