சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று அதிகாலை தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் தாம்பரத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பரமேஷ்(வயது 24), இன்று மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார். இந்நிலையில் ஓடத் தொடங்கிய சிறிது நேரத்தில் பரமேஷுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் பரமேஷ் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments