திருச்சி மாவட்டம் பீமா நகர் கீழத் தெருவைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 27) என்ற தனியார் கம்பெனி ஊழியர், இன்று காலை வழக்கம் போலப் பணிக்குச் செல்லும்போது, பீமா நகர் பழைய தபால் நிலையச் சாலையில் ஒரு கொடூரச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார். எதிர்த் திசையில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், தாமரைச்செல்வனின் வாகனத்தின் மீது மோதி அவரை நிலைதடுமாறிக் கீழே தள்ளியுள்ளனர்.
கீழே விழுந்த தாமரைச்செல்வன், அந்தக் கும்பல் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதைப் பார்த்தவுடன், உயிர் பயத்தில் அலறியடித்து அந்தப் பகுதியில் ஓடத் தொடங்கினார். உயிரைக் காத்துக்கொள்ள ஓடிய அவர், தில்லை நகரில் பணிபுரியும் காவலர் செல்வராஜ் வீட்டுக்குள் நுழைந்து, அங்குள்ள கிரைண்டர் அருகில் ஒளிந்து கொண்டார்.ஆனால், அந்தக் கொலையாளிக் கும்பல் விடாமல் வீட்டுக்குள் நுழைந்து, எஸ்எஸ்ஐ செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தின் கண்முன்னேயே தாமரைச்செல்வனை சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
காவலர் குடியிருப்பில் நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்ட சக காவலர்கள், கற்களை வீசி கொலையாளிகளைத் தாக்க முயன்றுள்ளனர். இதில், ஒருவர் பிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், தாமரைச்செல்வனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments