அமமுகவின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அக்கட்சியின் நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்றார். விழாவிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதற்கும், துரோகக் குற்றச்சாட்டுகளுக்கும் சரமாரியாகப் பதிலடி கொடுத்தார். அப்போது டிசம்பர் மாதத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பதாகச் சொல்லி இருந்தீர்கள், அதுகுறித்து என்ன தகவல்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த டிடிவி தினகரன்,
டிசம்பர் 31-ஆம் தேதி வரை உள்ளது. அதற்குள் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் போட்டிருக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன என்றும், கூட்டணி உறுதியான பின்பு அதுகுறித்துத் தெரிவிப்பதுதான் சிறந்ததாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அதிமுகவிற்குத் துரோகம் செய்தவர்களை ஆண்டவன் தண்டிப்பார் என்று எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அவர்,துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால், அதை எடப்பாடிக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். 2017-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அவர் செய்த துரோகங்களுக்கு ஆண்டவன் ஏற்கெனவே தண்டனை வழங்கிக்கொண்டிருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் மூலம் அவரது துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும்.
"ஓட்டு கேட்கும்போது உங்களிடம் கேட்டார், ஆனால் ராஜினாமா செய்யும்போது உங்களைக் கேட்டாரா?" என்று எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் குறித்து கோபிசெட்டிபாளையத்தில் பேசியதற்குப் பதிலளிக்கும் விதமாக டிடிவி தினகரன் முக்கியக் கேள்விகளை முன்வைத்தார்.2017-இல் திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்து அவரை முதல்-அமைச்சர் ஆக்கியது 18 எம்.எல்.ஏ.க்கள். அவர்கள் இவரால் ஜெயித்தவர்கள் அல்ல; இவருடைய அடையாளத்தால் அவர்கள் ஜெயிக்கவில்லை. ஆனால், அந்த 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யும் போது, தொகுதி மக்களிடம் கேட்டுத்தான் தகுதி நீக்கம் செய்தாரா?
அதேபோல், எம்.ஜி.ஆர் அவர்கள் கொண்டுவந்த சட்ட விதிகளை எல்லாம் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு, தன்னைச் சுற்றிச் சில கைத்தடிகளை வைத்துக்கொண்டு சட்ட விதிகளை மாற்றினார். அதை அதிமுக தொண்டர்கள் எல்லோரையும் கேட்டுத்தான் மாற்றினாரா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன்,
இன்றைக்கு 'அதிமுக என்ற கட்சியே இல்லாமல் செய்து இரட்டை இலைச் சின்னம் கையில் இருக்கிறது என்ற அகம்பாவம், ஆணவம், பதவி வெறி, பணத்திமிரில் பேசிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, இந்தத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இரட்டை இலையை இன்று எடப்பாடி பழனிசாமி மிகவும் பலவீனப்படுத்தி வருகிறார். அவர் அதிமுக என்ற கட்சியை 'எடப்பாடி அதிமுக' என மாற்றி, அதை ஒரு வட்டாரக் கட்சியாகவும், குடும்பக் கட்சியாகவும் மாற்றி வருகிறார்.
அங்கிருக்கக்கூடிய தொண்டர்கள் எல்லாம் தூங்குவதுபோல் நடித்தாலும், 2026 தேர்தலுக்குப் பின்னர் விழித்துக்கொள்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜக கூட்டணியில் இணைய அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு 'இல்லை' என்று பதிலளித்தார். ஓபிஎஸ் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை எடப்பாடிக்குக் கெடு விதித்திருக்கிறாரே என்ற கேள்விக்கு, 15-ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்தார்.

0 Comments