இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து செல்போன்களிலும் இனி, சஞ்சார் சாதி செயலி கட்டாயம் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் தொலைதொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. தொலைதொடர்பு சேவைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.
அதேவேளை, அனைத்து போன்களிலும் சஞ்சார் சாதி செயலியை கட்டாயமாக்குவது தனிநபர் உரிமைக்கு விடுக்கும் நேரடி அச்சுறுத்தல். ஒட்டுமொத்தமாக, நமது நாட்டை ஒரு சர்வாதிகார நாடாக இந்த அரசு மாற்றி வருகிறது. சைபர் மோசடிகளை தடுக்கும் வசதி அவசியம்தான், ஆனால் இது அந்த வரம்பையும் தாண்டி தனியுரிமையை கடுமையாக மீறுகிறது என்று எதிர்க்கட்சிகள் உள்பட பல தரப்பும் விமர்சனம் செய்தன. இதையடுத்து, சஞ்சார் சாதி செயலி வேண்டாம் என்றால் அதை நீக்கி கொள்ளலாம். செல்போனில் அந்த செயலியை வைத்திருப்பதா? வேண்டாமா? என பயனர்களே முடிவு எடுக்கலாம் என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.இந்நிலையில், புதிதாக உற்பத்தி செல்லப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் செல்போன்களில் சஞ்சார் சாதி செயலியை கட்டாயம் நிறுவ வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பொதுமக்கள் விரும்பினால் செயலியை தாங்களே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கும்போது, ஏன் அதை செல்போன்களில் கட்டாயமாக இணைக்க வேண்டும்? என்று ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், இது தொடர்பாக தங்கள் எதிர்ப்பை அதிகாரப்பூர்வ கடிதம் மூலம் ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் மத்திய அரசிடம் பதிவு செய்துள்ளன.

0 Comments