கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 12 மைல் தொலைவிலும், இலங்கையின் நெடுந்தீவிலிருந்து சுமார் 16 மைல் தொலைவிலும் நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பது வழக்கம்.இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை மறுநாள் (பிப்ரவரி 27) கொடியேற்றத்துடன் தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக ராமேஸ்வரத்திலிருந்து 75 விசைப்படகுகள் மற்றும் 26 நாட்டுப்படகுகள் என மொத்தம் 101 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் படகுகளில் சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் கச்சத்தீவிற்குச் செல்ல உள்ளனர்.
திருவிழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், இன்று முதல் வரும் மார்ச் 1-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்களுக்கு ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

0 Comments