சாத்தான்குளம் தந்தை,மகன் அடித்து கொலை..... 9 போலீசாருக்கு இன்று தண்டனை அறிவிப்பு

 


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாருக்கான தண்டனை விவரங்கள் இன்று மார்ச் 30-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

கடந்த மார்ச் 23,-ந் தேதி மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜி. முத்துக்குமரன், இந்த வழக்கில் தொடர்புடைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாரும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் மரணத்திற்கு காரணமானவர்கள்- குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயில்முத்து ஆகியோர் அடங்குவர். இவ்வழக்கில் தொடர்புடைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதால், மற்ற 9 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம், கொரோனா ஊரடங்கு நேரத்தில் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதில், இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது.

Post a Comment

0 Comments