எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

 


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு இருந்தார்.அப்போது எடப்பாடி பழனிசாமியின் பிரசார வேனில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். வேனில் பரிசு பொருட்கள், பணம் எதுவும் உள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். வாகனத்தில் இருந்த ஒவ்வொரு பெட்டி மற்றும் பைகள் என எதையும் விட்டு வைக்காமல் அங்குலம், அங்குலமாக சோதனையிட்டனர்.

ஒரு கட்டத்தில், வாகனத்தின் பேட்டரி இருக்கும் பகுதியை திறந்து காட் டும்படி பாதுகாவலருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். "சார், இது பேட்டரி வைக்கிற இடம், இதையும் திறக்க வேண்டுமா?" என்று பாதுகாவலர் சற்றே தயக்கத்துடன் கேட்டார். இதனை கவனித்த எடப்பாடி பழனிசாமி, சட்ட விதிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், "பரவாயில்லை, பேட்டரி பாக்சையும் திறந்து காட்டுங்கள்" என பாதுகாவலருக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து அந்த பகுதியையும் அதிகாரிகள் முழுமையாக திறந்து ஆய்வு செய்தனர். சில நிமிடங்கள் நீடித்த இந்த தீவிர சோதனையில் பணம், பரிசு பொருட்கள் எதுவுமே சிக்கவில்லை. மேலும் வாகனத்தின் முன் கட்டியிருந்த கட்சி கொடிக்கும் முறையான அனுமதி பெறப்பட்டிருந்தது.சோதனைக்கு பிறகு அதிகாரிகள் வாகனத்தை தொடர்ந்து செல்ல அனும தித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல, நேற்று இரவு காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் காரிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். சீமானின் காரை திறந்து சல்லடை போட்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை தொடர்பாக அதிகாரிகளிடம் சீமான் கேள்வி எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

0 Comments