திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டசபை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை எதிர்த்து திமுக கூட்டணியில் தமிழர் தேசம் கட்சியின் தலைவரான வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கே.கே. செல்வக்குமார் களமிறங்குகிறார்.
திமுக கூட்டணியில் தமிழர் தேசம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்சிக்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி ஒதுக்கப்படுகிறது.நத்தம் தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளராக தமிழர் தேசம் கட்சியின் தலைவரான செல்வக்குமார், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்க இருக்கிறார்.
நத்தம் சட்டசபை தொகுதியில் பெரும்பான்மையினராக இருப்பவர்கள் முத்தரையர்கள். இதற்கு அடுத்ததாக தலித்துகள், முக்குலத்தோர், வெள்ளாளர், வன்னியர் உள்ளிட்ட சமூகத்தினர் இருக்கின்றனர். இத்தொகுதியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பவர்கள் முத்தரையர்கள்.
1977-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை நத்தம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆண்டி அம்பலம் தொடர்ச்சியாக வெற்றியைப் பெற்று கோட்டையாக வைத்திருந்தார். இதில் 1996-ல் தமாகா வேட்பாளராக போட்டியிட்டு ஆண்டி அம்பலம் வெற்றி பெற்றார்.
2001-ம் ஆண்டு தேர்தல் முதல் அதிமுகவின் நத்தம் விஸ்வநாதன் தொடர்ச்சியாக 3 முறை இத்தொகுதியில் வென்றார்.2016-ல் நத்தம் விஸ்வநாதனை ஆத்தூர் தொகுதியில் போட்டியிட வைத்தார் ஜெயலலிதா. அந்த தேர்தலில் நத்தம் தொகுதியில் ஆண்டி அம்பலத்தின் மகன் ஆண்டி அம்பலம், திமுக வேட்பாளராக களம் கண்டு வெற்றி பெற்றார்.
ஆனால் 2021-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டு வெற்றி பெற நத்தம் தொகுதி மீண்டும் அதிமுக வசமானது.இந்த தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் மீண்டும் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நத்தம் தொகுதியில் 5-வது முறையாக களம் காணும் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நத்தம் விஸ்வநாதனை எதிர்த்து இத்தொகுதியின் பெரும்பான்மையினரான முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த தமிழர் தேசம் கட்சியின் தலைவர் செல்வக்குமார், திமுக கூட்டணியின் வேட்பாளராக களம் காண இருப்பது கவனம் பெற்றுள்ளது.

0 Comments