நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் சுயேட்சை சேர்மனுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக கவுன்சிலர்கள் வாபஸ் பெற்றதால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மொத்தம் 14 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 6 அதிமுக கவுன்சிலர்கள்,6 திமுக கவுன்சிலர்கள் மற்றும் 2 சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட மொத்தம் 14 கவுன்சிலர்கள் தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு தலா 6 கவுன்சிலர்கள் சம எண்ணிக்கையில் இருந்த நிலையில், சேர்மனை தேர்ந்தெடுக்க இரண்டு சுயேட்சை கவுன்சிலர்களின் ஆதரவானது இரண்டு கட்சிகளுக்குமே தேவைப்பட்டது.

இந்த நிலையில் நரிக்குடி ஒன்றிய சேர்மன் பதவியானது பட்டியல் இனத்தை சேர்ந்தவர்க்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற 11 வது வார்டு கவுன்சிலரான பஞ்சவர்ணம் என்பவர் அதிமுகவுக்கு ஆதரவளித்தார்.இதேபோன்று 10 வது வார்டு வீரசோழன் சுயேட்சை கவுன்சிலரான முகமது கோஷ் என்பவர் திமுகவுக்கு ஆதரவு அளித்த நிலையில் சுயேட்சை கவுன்சிலரான பஞ்சவர்ணத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் ஆதரவு அளித்த நிலையில் குலுக்கல் முறையில் பஞ்சவர்ணம் நரிக்குடி ஒன்றிய சேர்மனாக தேர்வு செய்யபட்டார்.

இந்த நிலையில் நரிக்குடி ஒன்றிய அதிமுக துணை சேர்மனாக நரிக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.

ஆரம்ப காலத்தில் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணம் கடந்த சில மாதங்களாக தன்னிச்சையாக செயல்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், திமுகவிற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், திமுக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை அவரது வீட்டிற்கே நேரில் சென்று நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணம் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் அதிமுக கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்திருந்த நிலையில், சேர்மன் பஞ்சவர்ணத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வர முடிவு செய்தனர்.

இந்த நிலையில் இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் புகாரளித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து திமுக கவுன்சிலர்களும் சேர்மன் மீது புகார் அளித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் இன்று அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணக்குமார் தலைமையில் நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் கூட்டபட்டு சேர்மன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் சேர்மனுக்கு எதிராக 12 கவுன்சிலர்களும், ஆதரவாக 2 கவுன்சிலர்களும் வாக்களித்த நிலையில் நரிக்குடி ஒன்றிய சேர்மனுக்கு அளித்து வந்த ஆதரவு திரும்ப பெறப்பட்டதாக கருதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து நரிக்குடி ஒன்றிய சேர்மன் பதவியானது தற்போது காலியாகவுள்ளது குறிப்பிடத்தக் கது.

இந்த நிலையில் நரிக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளரும்,தற்போதைய நரிக்குடி ஒன்றிய துணை சேர்மனுமான அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தொடர்ந்து நரிக்குடி ஒன்றிய துணை சேர்மனாக நீடித்து வருகிறார்.

Post a Comment

0 Comments