தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கிய திருப்புமுனையாக உள்ளது. சுமார் 60 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சிகளுக்கு பின்பு நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சி அமைக்க உள்ளது.
விஜய் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே சுமார் 35 சதவீத வாக்கு சதவீதத்துடன் 108 இடங்களில் வெற்றி பெற்று பலமான கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டுவதற்கும் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கவும் இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகின்றன. இதனால் தவெக தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் கூட்டணி ஆட்சி அமைக்கும் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. தவெகவுக்கு இப்போது காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவு கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது மட்டும் போதாது என்பதால், பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக, அதிமுக கூட்டணியில் இருந்து ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியுடன் தவெக தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உடன் நடைபெறும் பேச்சுவார்த்தையிலே ஒரு முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் துணை முதல்வர் பதவியை தனது மனைவி சவுமியா அன்புமணிக்கு வழங்க வேண்டும் என அன்புமணி கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விஜய் ராஜினாமா செய்ய உள்ள ஒரு தொகுதியையும் பாமக கோரியுள்ளது. நான்கு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற ஒரு கட்சி தவெக-வின் நெருக்கடியான சூழ்நிலையை உணர்ந்து பெரிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது தவெக தரப்பு ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாமகவின் கோரிக்கைக்கு தவெக உடன்படாத நிலையில், மாற்று கூட்டணி வாய்ப்புகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது விஜய் தலைமையிலான தவெக. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவற்றுடன் தவெக தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆதரவை திரட்ட முடியும்.
இந்தப் பின்னணியில் விஜய் தனது அடுத்த நடவடிக்கையை திட்டமிட்டுள்ளார். சென்னையில் தவெக எம்.எல்.ஏ.க்களை சந்தித்த பிறகு, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தவெகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் அளிக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில், விரைவில் தவெக ஆட்சி அமைக்கும் பதவியேற்பு விழாவுக்கு ஆளுநர் நேரம் குறிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் எவ்வளவு நேரம் அவகாசம் வழங்குவார் என்பது தெரியாத நிலையில், இந்த குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தேவையான ஆதரவை திரட்டி பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் தயாராக உள்ளார்.

0 Comments