நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர் கைது
மும்பை வடலாவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது32). இவரது மனைவி ரோஷிணி. கடந்த 27-ந் தேதி தம்பதி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். மேலும் ரோஷிணி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்களிடம் அவர் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த ரோஷிணியின் சகோதரர்கள் அங்கு வந்து பார்த்தனர். கழுத்தில் காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்தனர். இதனால் சாவில் மர்மம் இருப்பதாக உணர்ந்த சகோதரர்கள் சம்பவம் குறித்து ஆர்.ஏ.கே. மார்க் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின்பேரில் போலீசார் ரோஷிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உயிரிழந்த பெண்ணின் கணவர் ராஜேசை பிடித்து விசாரித்தனர். இதில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது இதன் காரணமாக அவரை கொலை செய்து மாரடைப்பு ஏற்பட்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
No comments