குடிகார கணவனை வெட்டி கொன்ற மனைவி....
தேனி மாவட்டம் பாலக்கோம்பை, ராயவேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் ( 37). இவரது மனைவி அழகுசின்னு (31). கூலித் தொழிலாளிகளான இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கணவர் சண்முகவேல் தினமும் குடித்துவிட்டு வருவதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வந்த சண்முகவேல், மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த அழகுசின்னு வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து சண்முகவேல் முகத்தில் தூவினார். அதனால் எரிச்சல் தாங்க முடியாமல் அவர் அலறி துடித்த நிலையில் ஆத்திரம் அடங்காத அழகுசின்னு அரிவாளை எடுத்து சண்முகவேலின் இடது கை, கால் மற்றும் பின் தலையில் சரமாரியாக வெட்டினார்.
இதில் ரத்த வௌ்ளத்தில் கீழே சரிந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜதானி போலீஸார் அங்கு சென்று சண்முகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி அழகுசின்னுவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அழகு சின்னுவும், அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர். ஆனால் அதன்பிறகும் சண்முகவேல் தினமும் மது குடித்துவிட்டு போதையில் தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால் அவர் மீது மிளகாய் பொடியைத் தூவி அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததாக அழகு சின்னு போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மதுபோதையில் தகராறு செய்த கணவனை, மனைவி அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments