குடிபோதையில் காவல்துறையினரிடம் இளம்பெண் ஆபாசமாக பேசி ரகளை
சென்னை விநாயகபுரத்தை சேர்ந்த ரேகா (26) என்ற இளம்பெண் குடித்துவிட்டு நள்ளிரவில் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி வந்தார். அப்போது அவர் மாதவரம் பகுதியில் உள்ள புத்தகரம் என்ற இடத்திற்கு அருகே வந்தபோது தடுமாறி கீழே விழுந்தார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அப்பெண்ணை பெரம்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். போதையில் இருந்த ரேகா, அங்கு தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களை தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்து காவல்துறையினர் ரேகாவிடம் விசாரணை நடத்தினார். அவர் போதையில் காவல்துறையினரையும் தரக்குறைவாக பேசினார். மேலும், ஒரு பெண் போலீஸைத் தாக்கி அவரது பேட்ஜ், செல்போன் ஹெட்செட் ஆகியவற்றை அறுத்து ரகளை செய்தார். மேலும் அந்த பெண் போலீஸாரை ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில், ரேகா சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதாகவும், அழகு நிலையத்தில் வேலை பார்ப்பதாகவும், தனக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். ரேகா ஆபாசமாக பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து, அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments