• Breaking News

    சாவுக்கு அதிகாரிகள் தான் காரணம்.... கடிதம் எழுதிவைத்துவிட்டு அங்கன்வாடி பெண் பணியாளர் தற்கொலை....

     


    தனது சாவுக்கு  அதிகாரிகள்தான் காரணம் என கடிதம் எழுதிவைத்துவிட்டு  அங்கன்வாடி பெண் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு பகுதியை சேர்ந்தவர் அம்சவல்லி ( 42). கடந்த 2013-ம் ஆண்டு இவரது கணவர் பாலமுருகன் உயிரிழந்த நிலையில் 2019-ம் ஆண்டில் அங்கன்வாடி மைய பணியாளராக நியமிக்கப்பட்டார். சிம்மக்கல் மைக்கேல் தெரு பகுதியில் உள்ள அங்கன்வாடியில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அம்சவள்ளிக்கும், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


    இந்நிலையில் அம்சவல்லியின் அறைக் கதவு நேற்று காலை வெகுநேரமாக திறக்கப்படவில்லை. இதையடுத்து அவரது மகன் சூரியநாராயணன் அறைக்கதவை தட்டிப் பார்த்துள்ளார். அப்போதும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த சூரிய நாராயணன், அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.  அப்போது அம்சவல்லி தூக்கில் தொங்கினார். 



    இதையடுத்து விளக்குத்தூண் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அத்துடன் அம்சவல்லி கைப்பட நோட்டில் எழுதியிருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.


    அதில் 'என் மன உளைச்சலுக்கும், நான் எடுத்த முடிவுக்கும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரியும், அவரது உதவியாளரும் தான் காரணம். என் சாவுக்கு அவர்கள் மட்டும்தான் காரணம்' என்று எழுதியிருந்தார். அந்த நோட்டில் இன்னொரு பக்கத்தில் தனது மகனுக்கும் உருக்கமான கடிதத்தை அவர் எழுதியிருந்தார். 'மன்னித்துவிடு சூர்யா' என்ற அவர் எழுத்தை பார்த்ததும் அவரது மகன் சூரியநாராயணன் கதறி அழுதார்.



    தனது தாயாரின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூரிய நாராயணன் போலீஸில் புகார் அளித்துள்ளார். அம்சவல்லியின் தற்கொலை குறித்த செய்தி அறிந்து அங்கன்வாடி பணியாளர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,  சூரிய நாராயணனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    இதையடுத்து அங்கு வந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச்செய்தனர். ஆனாலும் உடலை வாங்க மறுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  அதன் பின்னர் ஆம்புலன்ஸில்  போலீஸார் உதவியுடன் அவரது உடல் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

    No comments