சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி வெங்கடசுப்பா ரெட்டியார் சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து பல்வேறு கட்சியினர், மீனவ அமைப்புகள் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.புதுச்சேரி திமுக சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்ரமணியன், ”புதுச்சேரியை பின்பற்றி தமிழகத்திலும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வண்ண நிறத்தில் உள்ள பஞ்சுமிட்டாய்க்கு மட்டுமே தடை விதிக்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் உள்ள பஞ்சு மிட்டாய்க்கு தடை இல்லை.” என்றார்.மேலும், ”மதுரை எய்ம்ஸ் கல்லூரி விவகாரத்தில், தூங்கும் நபர்களை எழுப்பி விடலாம் தூங்குவது போல் நடிக்கும் நபர்களை எழுப்ப முடியாது. மதுரை எய்ம்ஸ் கல்லூரி கட்டுமானத்தில் ஏன் காலதாமதம் ஆகிறது? 2019 பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமரை அழைத்து வந்தது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாமல் யாருக்கோ சொந்தமான ஒரு இடத்தில் மருத்துவ கல்லூரி கட்ட எப்படி அடிக்கல் நாட்டப்பட்டது? யாருக்கோ சொந்தமான இடத்தில் அடிக்கல் நாட்ட ஒரு மாநில முதலமைச்சர், எப்படி பிரதமரை அழைத்து வந்தார்? நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாமல் வேறு ஒருவருக்கு சொந்தமான இடத்தில் அடிக்கல் நாட்டியிருந்தால், அதில் முதல் குற்றவாளி பழனிசாமி தான். அது தெரியாமல் பிரதமர் அடிக்கல் இருந்தால் அவரும் குற்றவாளி தான்” என்றார்.தொடர்ந்து பேசிய அவர், ”2020ம் ஆண்டு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்த பிறகு, 2023ல் நில ஆர்ஜிதம் செய்யப்படாமல் இருப்பதால்தான் எய்ம்ஸ் கல்லூரி காலதாமதம் என்று நிதி அமைச்சர் கூறுவது பொறுப்பற்றது. இந்தியாவில் உள்ள மற்ற எய்ம்ஸ் கல்லூரிக்கு எல்லாம் நிதி ஆதாரம் கொடுக்கும் மத்திய அரசு தமிழகத்தில் உள்ள கல்லூரிக்கு மட்டும் நிதி தர மறுக்கிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை“ என்று தெரிவித்தார்.

0 Comments