• Breaking News

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உடைக்கிறார் யுவராஜா....? விழி பிதுங்கும் ஜி.கே.வாசன்.....

     


    மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது என்று  ஜி.கே.வாசன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சென்னையில் ஜிகே வாசனை நேற்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவுடனான கூட்டணியை உறுதி செய்து அறிவித்தார் ஜிகே வாசன். 

    பின்னர் வாசனை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று  சந்தித்துப் பேசினார். அதையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை நடைபெறும் பிரதமர் மோடியின்  பொதுக் கூட்டத்தில் ஜி.கே வாசன் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.  பாஜக கூட்டணியில் இணைவதாக ஜி.கே. வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிறிது நேரத்திலேயே தமிழ் மாநில காங்கிரஸின் மாநில செயலாளர் யுவராஜ், சேலத்தில் திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். பாஜகவுடன் ஜி.கே.வாசன் இணக்கமான நட்புறவில் இருந்தபோதிலும் சிபிஎஸ்இ தேர்வு முடிவு உள்ளிட்டவைகளில் பிரதமர் மோடியையும், மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்தவர் யுவராஜ். 

    கூட்டணி குறித்த பேச்சு எழுந்தபோது தமிழ் மாநில காங்கிரசுக்கு இரண்டு தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி என்றும், சொந்த சின்னத்தில் போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் அண்மையில் கூறியிருந்தார். அதாவது அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது அவர் போன்ற நிர்வாகிகளின் விருப்பமாக இருந்துள்ளது.

    ஆனால் தற்போது பாஜக கூட்டணியில் ஜிகே வாசன் சேர்வதாக அறிவித்த உடன் அதிருப்தி அடைந்த யுவராஜ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ், எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக  சந்தித்துப் பேசியதாக கூறினார். 

    தமாகாவின் பெரும்பாலான நிர்வாகிகள் முடிவுக்கு மதிப்பு தராமல், பாஜக கூட்டணியில் இணைவதாக ஜிகே வாசன் அறிவித்ததால், யுவராஜ் உள்ளிட்ட  தமாகா நிர்வாகிகள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிருப்தியில்  இருக்கும் தன்னைப்போன்ற கட்சி நிர்வாகிகளுடன் தமாகாவை உடைத்து அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா அல்லது அதிமுகவில் அவர் சேருவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

    தமாகாவில் இருந்து விலகி யுவராஜ் அதிமுகவில் இணைந்தால்  ஈரோடு மாவட்டத்தில் அதிமுக வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்று மாலை இன்னும் பலர் பாஜகவில் சேர்வார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியுடனான யுவராஜின் இந்த திடீர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments