• Breaking News

    கலெக்டர் அலுவலகத்தில் கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்

     


    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதிநாள் முகாம் இன்று நடைபெற்றது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து அதிகாரிகளிடம் நேரடியாக மனுக்களை அளித்தனர்.


    இன்று ஏராளமானோர் மனு அளிக்க வருகை தந்திருந்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸார் பொதுமக்களை தனித்தனியாக சோதனை செய்ததோடு, அவர்களிடம் இருந்த பொருட்களையும் சோதனை செய்த பிறகே ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.


    இதனிடையே அங்கு வந்த பெண் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வைத்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


    கத்தியை கொடுக்குமாறு அவரிடம் போலீஸார் வலியுறுத்திய போதும், தொடர்ந்து கழுத்தில் கத்தியை வைத்தபடியே அந்த பெண் கோபமாக பேசியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர் வைத்திருந்த கத்தியை பிடுங்கி விட்டு விசாரணைக்காக பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.


    அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் கோவை மாவட்டம் மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த மரகதவல்லி என்பது தெரியவந்தது. கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் இவரது வீட்டின் அருகில் வசித்து வரும் மாரியம்மாள், சக்தி, தேவா கீதா ஆகிய 3 பெண்கள் நிலத்தகராறு காரணமாக அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேரூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகார் மனுவின் மீது உரிய நடவடிக்கையை போலீஸார் மேற்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.


    இது தொடர்பாக அவர் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், விரக்தியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு இவ்வாறு தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இவ்வாறு தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    இந்த சம்பவம் காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

    No comments