• Breaking News

    திண்டுக்கல்லில் கவுன்சிலரின் தந்தை ஓட ஓட வெட்டிக்கொலை

     

    திண்டுக்கல்லில் திமுக கவுன்சிலரின் தந்தை ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    48 வார்டுகள் கொண்ட திண்டுக்கல் மாநகராட்சியில் தற்போது திமுகவைச் சேர்ந்த இளமதி என்பவர் மேயராக பதவி வகித்து வருகிறார். இந்த மாநகராட்சியில் 25 வது வார்டில் திமுகவைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் குடைப்பாறைப்பட்டி பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது தந்தை நாகராஜன். நாகராஜன் இன்று மதியம் மக்கான் பள்ளிவாசல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த சில மர்ம நபர்கள், அவர் மீது மிளகாய்ப் பொடியை தூவியுள்ளனர். இதனால் நிலைகுலைந்து போன நாகராஜன் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அந்த மர்ம நபர்கள் பட்டப் பகலில் ஏராளமான பொது மக்கள் முன்னிலையில் சரமாரியாக நாகராஜனை வெட்டியுள்ளனர்.

     உயிர் பயத்தில் அருகில் இருந்த கடைக்குள் புகுந்த அவரை விடாமல் துரத்திச் சென்று அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களிலும் வெட்டுக்காயம் அடைந்த நாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் நகர போலீஸார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதத்தில் நாகராஜன் படுகொலை செய்யப்பட்டாரா அல்லது அரசியல் காரணங்கள் உள்ளதா என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் திண்டுக்கல் நகரப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    No comments