தூத்துக்குடி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் குளத்தில் மூழ்கி பலி
தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 13 வயதான 7ம் வகுப்பு படிக்கும் சந்தியா, 10 வயதான 5ம் வகுப்பு படிக்கும் கிருஷ்ணவேணி, 7 வயதான 2ம் வகுப்பு படிக்கும் இசக்கி ராஜா என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று பிற்பகல் 3 குழந்தைகளும் தங்களது உறவினர்களுடன் பேரூரணியில் அமைந்துள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர்.உறவினர்கள் அனைவரும் கரையோரம் குளித்து கொண்டிருந்தபோது, குழந்தைகள் மூவரும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதில் சந்தியா, கிருஷ்ணவேணி, இசக்கி ராஜா ஆகிய மூன்று பேரும் குளத்தில் மூழ்கினர். நீச்சல் தெரிந்தவர்கள் மூன்று குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தைகள் மூவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அனைவரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மூன்று குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தட்டப்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments