• Breaking News

    பாகிஸ்தானின் சாதனையை தகர்த்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள்

     

    இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தி அசத்தினர்.

    இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 79 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.


    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாளில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 135 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் ரோகித் 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.இந்த இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சில சாதனைகள் படைத்துள்ளனர். அவைகளின் விவரம் பின்வருமாறு;-

    1. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். 220 பந்துகளில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர். இதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் குறைந்த பந்துகளில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற பாகிஸ்தானின் சாதனையை தகர்த்த இந்திய வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் 250 பந்துகளில் இச்சாதனையை செய்திருந்தனர்.

    2. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் டெஸ்டின் முதல் நாளில் 10 விக்கெட்டுகளையும் எடுத்திருப்பது 1976-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் நிகழ்வாகும்.

    3. தர்மசாலா மைதானத்தில் நடந்துள்ள 58 முதல்தர கிரிக்கெட்டில் (உள்ளூர் முதல்தர போட்டி மற்றும் டெஸ்டை சேர்த்து) ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

    No comments