• Breaking News

    ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்


    முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.சற்குணபாண்டியன். திமுக துணைப் பொதுச் செயலாளராகவும் இருந்த அவர் சென்னை  ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில்  பலமுறை நின்று  வெற்றி பெற்றுள்ளார். இந்தநிலையில் கடந்த  2016-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா களம் இறங்கினார். இவருக்கு சரியான போட்டியை கொடுக்க  எஸ்.பி. சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் களம் இறக்கப்பட்டார். 

    ஜெயலலிதாவுக்கு எதிராக தீவிரமாக களப்பணியாற்றிய சிம்லா முத்துச்சோழன் அதன் விளைவாக அரசியல் களத்தில் நன்கு அறியப்பட்டார். கடுமையான போட்டியின் முடிவில்  30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.  ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டதால், சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் பிரபலமானார். இதனையடுத்து ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் சிம்லா முத்து சோழனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்காமல் வழக்கறிஞராக இருந்த மருதுகணேஷுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், அவர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக டெபாசிட் கூட வாங்க முடியாமல் படு தோல்வியடைந்தார்.

    அடுத்தடுத்த தேர்தல்களில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த சிம்லா முத்து சோழனுக்கு தொடர்ந்து ஏமாற்றமே கிடைத்தது. சற்குணபாண்டியன் மறைவுக்கு பின் கட்சியில் உரிய மரியாதை கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கட்சி பணியில் இருந்து சற்று விலகி இருந்தவர் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். இது முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட   திமுகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    No comments