• Breaking News

    திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கேஜ்ரிவால்..... சிறையில் என்னென்ன சலுகைகள்......

     

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மாதம் 21 ம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.  நேற்றுடன் அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்ததையடுத்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை அவரை மேற்கொண்டு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரவில்லை.

    இதனால் அர்விந்த் கேஜ்ரிவாலை  வருகிற 14-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட  அர்விந்த் கேஜ்ரிவால் 2 எண் கொண்ட அறையில் அடைக்கப்பட்டார்.அவருக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, சாக்லேட் மிட்டாய்கள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பாட்டில் குடிநீர், தலையணை உள்ளிட்டவை வழங்கவும்,  கேஜ்ரிவால் தனது மனைவியை தினமும் சந்திக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 20 சானல்கள் தெரியும் வகையிலான தொலைக்காட்சி வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞரை சந்திக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கேஜ்ரிவால் நீரிழிவு நோயாளி என்பதால், அவரது உடல் நிலையைக் கண்காணிக்க மருத்துவ உபகரணங்கள் வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோக, பகவத் கீதா, ராமாயணம் மற்றும் ஹவ் பிரைம் மினிஸ்டர் டிசைட்ஸ் ஆகிய நூல்களையும் அவர் எடுத்து செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. புத்தகங்களை அமர்ந்து வாசிக்க மேஜை நாற்காலி வைத்துக்கொள்ளவும் அர்விந்த் கேஜ்ரிவால் அனுமதி கேட்டுள்ளார்.

    No comments