ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்வு
தங்கம் விலை கடந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும் என மத்திய நிதி மந்திரி அறிவித்தார். பட்ஜெட் எதிரொலியாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,280-க்கு விற்று வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு எவ்வித மாற்றமும் இன்றி ரூ.92.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
No comments