கோவை வேளாண்மை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்றதால் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக அரசியலில் கவர்னர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழகங்களில் வேந்தராகவும் உள்ளார். பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குவது என்பது மரபு. ஆனால் ஆர்.என். ரவி கவர்னராக பொறுப்பேற்றதில் இருந்து அவர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவை தி.மு.க.,வின் துறை அமைச்சர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஏற்கனவே இதுபோன்று புறக்கணித்துள்ளனர். அந்த பட்டியலில் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் 2வது முறையாக இணைந்துள்ளார். கோவையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு வேளாண்மை பல்கலை பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிலையில், இணை வேந்தர் ஆன அமைச்சர் விழாவை புறக்கணித்துள்ளார்.
2வது ஆண்டாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.இம்மாத இறுதியில் சென்னை பல்கலை பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த விழாவிலும் துறை அமைச்சர் கலந்து கொள்வாரா அல்லது வழக்கம் போல் புறக்கணிப்புதானா என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

0 Comments