• Breaking News

    பிரபல நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திய கொள்ளையன் கைது

     


    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி - நடிகை ஷர்மிளா தாகூரின் மகன் சயீப் அலிகான். இவர் ஏராளமான ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். நடிகை கரீனா கபூரை மணந்த இவர் மஹாராஷ்டிராவின் மும்பையில், பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    சயீப் அலிகான் வீட்டுக்குள் நள்ளிரவில் நுழைந்த கொள்ளையன் அவரை, ஆறு முறை கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நடிகர் சயீப் அலிகான் வீட்டு பணிப்பெண் ஆயா எலியாமா பிலிப் கூறியதாவது: குளியலறையில் ஒரு நபர் மறைந்து இருப்பதை பார்த்தேன். யார் என்பதை பார்க்க விரைந்து வந்தேன்.

    அந்த நபர் நடிகர் சயீப் அலிகான் மகன் ஜெயின் அறைக்குள் வந்தார். நான் சத்தமிட்டதும் என்னை பிளேடால் தாக்கினர். என் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. நான் அவரிடம் என்ன வேண்டும் என்று கேட்டேன். அவர் ரூ.1 கோடி வேண்டும் என்று மிரட்டினார். இவ்வாறு அவர் கூறினார். மற்றொரு வீட்டு, உதவியாளரும் அங்கு வந்ததால், அந்த மர்ம நபர் தப்பி ஓட்டம் பிடித்தார். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி.,யில் பதிவாகியது.

    பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து கத்தியால் குத்தியவரை இன்று (ஜன.,17) போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை பாந்த்ரா போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments