• Breaking News

    75 ஆண்டு கால பழமையான பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு பள்ளியை பராமரித்திட நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்..... அமைச்சரிடம், மதிமுக மாவட்ட செயலாளர் கோரிக்கை


    75 ஆண்டு கால பழமையான பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு பள்ளியை பராமரித்திட நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என கல்வி அமைச்சரிடம், மதிமுக மாவட்ட செயலாளர்  உதயசூரியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளரும், கீழப்பாவூர் ஒன்றிய கவுன்சிலருமான இராம. உதயசூரியன் தமிழக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழியை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாவூர்சத்திரத்தில் 75 ஆண்டு கால பழமையான  த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த வட்டாரத்தில் பலரும் கல்வியில் உயருவதற்கு இந்த பள்ளியே காரணமாகும். பல வரலாறு கொண்ட இந்த பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் தற்போது மிகவும் பழுதடைந்து மாணவர்கள் அமர்ந்து கல்வி பயில முடியாத நிலையில் உள்ளது. மேலும் கல்வி பயிலுவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளும் குறைவாக உள்ளது. இதனால் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருக்கின்ற வகுப்பறைகளும் சரியான பராமரிப்பின்றி காணப்படுகிறது.

    பாவூர்சத்திரத்தில் நடைபெறும் சாலை விரிவாக்கத்தின்போது இப்பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் நிலம் கையகப்படுத்தப்பட்ட வகைக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட ரூ.1கோடியே 16 இலட்சமும் இப்பள்ளியின் பராமரிப்பு பணிக்கு பயன்படுத்தப்படாமல் அரசு கணக்கிற்கு செலுத்தப்பட்டுவிட்டது. இதனால் நிதி வசதி இன்றி பள்ளியின் பராமரிப்பு பணி நடைபெறாமல் உள்ளது. மேலும் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் இப்பள்ளியின் எதிர்காலத்தை பேண மாணவ, மாணவிகள் இருபாலரும் சேர்ந்து பயிலும் பள்ளியாக மாற்றியமைத்திட வேண்டும்.

    மேலும் 2008ம் ஆண்டு ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் நபார்டு நிதியில் கட்டப்பட்ட இப்பள்ளியின் பிரதான கட்டிடம் அதன் பிறகு வர்ணம் பூசப்படாமல் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பு இக்கட்டிடத்திற்கு வர்ணம் பூசும் பணியினையும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    No comments